உள்ளூர் செய்திகள்
கொலை

கள்ளக்காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொடூரமாக கொன்ற வாலிபர்

Published On 2022-02-15 15:02 IST   |   Update On 2022-02-15 15:02:00 IST
வெம்பாக்கம் அருகே கள்ளக்காதலியின் மகனை சுவற்றி அடித்து கொடூரமாக கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:

கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா (வயது 26). இவரது மகன்கள் நித்தீஷ் (6) சித்தார்த் (4).

நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். தொடர்ந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் வினோத்குமார் (30) என்பவருடன் நர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாங்கால் கூட்டுரோடு ஷூ கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்தார்.

இருவரும் மகன்களுடன் வெம்பாக்கம் அருகே மாங்கால் கூட்ரோடு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வினோத்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

நர்மதா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மகன்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது 2-வது மகன் சித்தார்த் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தான். இதனை கண்டு நர்மதா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு மாமண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சித்தார்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நர்மதா தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் கள்ளக்காதலன் வினோத்குமார் சிறுவன் சித்தார்த்தின் இரண்டு கால்களையும் பிடித்து சுவற்றில் சுழற்றி அடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் வீட்டிற்கு வந்த போது சிறுவனை அடித்துக் கொன்று விட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News