உள்ளூர் செய்திகள்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2 வாரம் வேலை வழங்கக்கோரி பெண்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாதத்திற்கு 2 வாரம் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்

Published On 2022-02-15 08:10 GMT   |   Update On 2022-02-15 08:10 GMT
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாதத்திற்கு 2 வாரம் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

கிராமத்தில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கிராமப் பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருமாதமும் 2 வாரங்கள் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், முனுகப்பட்டு ஊராட்சியில், கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தற்போது மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் வேலை வழங்குவதாகவும், அதை மாற்றி, மாதத்திற்கு இரண்டு வாரங்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம பெண்கள் மனுக்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News