உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 160 பழைய குற்றவாளிகள் கைது

Published On 2022-02-14 15:39 IST   |   Update On 2022-02-14 15:39:00 IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 160 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 160 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் நடக்கிறது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் மாவட்டம் முழுவதும் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். 

தேர்தல் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன்படி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயார் செய்து வைத்திருந்தனர். 

கடந்த சில நாட்களாக அவர்களது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 483 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் தற்போது 40 பேர் சிறையில் உள்ளனர். 

தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் 160 பழைய குற்றவாளிகளை மாவட்டம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து கைது செய்தனர். 

அவர்களை ஆர்டிஓ முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 283 பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதில் நன்னடத்தையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Similar News