உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்

Published On 2022-02-14 15:05 IST   |   Update On 2022-02-14 15:05:00 IST
அரச்சலூர் அருகே தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
ஈரோடு:

அரச்சலூர் அருகே தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை, சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவருக்கும்  ஈரோடு கொளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா (23) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இதனால் சதீஷ்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்று மதியம் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரியாவின் தாயார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரியா வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பிரியாவின் தாயார் அரச்சலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அதன்பேரில் அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமணம் ஆகி 7 வருடமே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.

Similar News