உள்ளூர் செய்திகள்
வேப்பூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
வேப்பூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் மேலமாத்தூர் ரெயில்வே காலனி அருகில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் விருத்தாசலம் அருகே எடசித்தூர் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மணல் கடத்தி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.