உள்ளூர் செய்திகள்
நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் - நகை கொள்ளை
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் - நகை கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து பணம்- நகை கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு வீரப்பம் பாளையம், யூ.ஆர்.சி. நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வன் (வயது 59). சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பன்னீர்செல்வன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் நேற்று பன்னீர்செல்வன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.
வீட்டு அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் தங்க கம்மல்மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பன்னீர் செல்வன் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.