உள்ளூர் செய்திகள்
ரெயில் மூலம் யூரியா ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டும்

Published On 2022-02-13 15:01 IST   |   Update On 2022-02-13 15:01:00 IST
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டும்  என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கூறியதாவது:


ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையத்தில் உரங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நவரை நெல், பயறு வகைகள், எள் ஆகிய பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்திற்குத் தேவையான யூரியா உரம் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையிலிருந்து ரெயில் மூலம் கடந்த 10-ந் தேதி எம்.எப்.எல் நிறுவனத்தின் 1,204 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தது. மேலும் 11-ந் தேதி மங்களூரிலிருந்து ரெயில் மூலம் ஐ.பி.எல் நிறுவனத்தின் 1,300 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தடைந்துள்ளது.

உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரிய முதன்மைச் சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, 

அனைத்து விற்பனை களையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985&ன் படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும். இதனை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் (உர ஆய்வாளர்கள்) தீவிரமாக கண்காணிக்க உத்திரவிடப் பட்டுள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4137 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 843 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1087 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4490 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் உரங்களை வாங்கும் போது மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து உரிய ரசீது பெற்று உரங்களை வாங்கி பயன்பெறு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News