உள்ளூர் செய்திகள்
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணி தீவிரம்
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,221 வாக்குச்சாவடிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஆகியோர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் களுக்கு தபால் ஓட்டுச்சீட்டு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 710 போலீசார் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் அவர்களுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் ஓட்டு சீட்டு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதேப்போல் ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் அத்துறைகளின் சார்பில் தபால் வாக்கு சீட்டு படிவம் வழங்கப்படும்.
இது குறித்து தேர்தல் பிரிவு டி.எஸ்.பி அண்ணா துரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் சட்டம் ஒழுங்கு போலீசார் 608 பேருக்கும், ஆயுதப்படை போலீசார் 102 பேருக்கும் தபால் ஓட்டுச்சீட்டு அளிக்கப்பட உள்ளது.
இவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு இவர்களது மாவட்டம், தொகுதி, வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் வழங்கப்பட உள்ளது.
சட்டமன்றம் மக்களவைத் தேர்தல் போல இந்த தேர்தல் கிடையாது என்பதால் அவர் அவர்கள் அஞ்சல் அலுவலகம் மூலம் தங்களது வாக்கினை தபால் மூலம் செலுத்த வேண்டும்.
இதனை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து தபால் வாக்கு உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டுகளுக்கு அனுப்பி வைத்து அந்த வாக்கினை சேர்த்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.