உள்ளூர் செய்திகள்
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் திரண்டதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்
வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், கார்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தாளவாடி பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பண்ணாரி சோதனை சாவடியையும் முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.
மேலும் அவர்கள் புலிகள் காப்பக பகுதியில் 30 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் தெரியாத ஏராளமான கனரக வாகனங்கள் வழக்கம்போல் கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தது. அந்த வாகனங்களை தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக செல்ல முயன்ற கனரக வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் 600-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு 300-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கனரக வாகன ஓட்டிகள் விடிய, விடிய வனப்பகுதியிலேயே கடும் குளிரில் தவித்தனர். இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் திரண்டதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் கனரக வாகன ஓட்டிகளை மெதுவாக வாகனங்களை இயக்க அறிவுரை வழங்கினர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் (அரசு, தனியார் பஸ்கள்) மற்றும் அவசர ஊர்திகள் போன்றவைகளுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4 சக்கர பயணிகள் வாகனங்களுக்கு ரூ.20, வேனுக்கு ரூ.30, 4 சக்கர கனரக வாகனங்களுக்கு ரூ.20, சிறு லாரி வாகனங்களுக்கு ரூ.20, 6 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, 8 சக்கர வாகனங்களுக்கு ரூ.60, 10 சக்கர வாகனங்களுக்கு ரூ.80, 12 சக்கர வாகனங்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஒரே இடத்தில் லாரிகளை நிறுத்தி வைத்திருந்தோம். இரவில் உணவு கூட சாப்பிட முடியவில்லை. மேலும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்து வதால் இரவு நேரத்தில் வனவிலங்குகளால் அச்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.