உள்ளூர் செய்திகள்
வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணிகள் தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 14 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 59 வார்டுகளில் பதிவாகும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பதிவாகும் வாக்கு பதிவு எந்திரங்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியிலும்,
சத்தியமங்கலம் நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் காமதேனு கல்லூரி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்பட உள்ளது. இது தவிர 42 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் 9 இடங்களில் வைத்து எண்ணப்பட உள்ளது.
இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட உள்ள மையங்களில் மின்னணு வாக்குபெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.