உள்ளூர் செய்திகள்
போராட்டம் (கோப்பு படம்)

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-11 13:51 IST   |   Update On 2022-02-11 13:51:00 IST
ஈரோடு கொல்லம்பாளையம் அருகே சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

ஈரோடு, கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு சுற்றிலும் கிரில் கம்பிகளால் அமைக்கப்பட்ட இக்கோவில் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு தனியாக பாத்தியப்பட்ட நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது. கோவில் அருகில் உள்ளதால் தன்னுடைய நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி நேற்று மாலை கோவிலில் உள்ள சாமி சிலைகளை அங்குள்ள புறம்போக்கு இடத்தில் வைத்து விட்டு கோவில் கிரில் கம்பிகளை அவர் அகற்றி உள்ளார்.

மேலும் அங்கிருந்த சில மரங்களையும் வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு வழிபட வந்தபோது பொதுமக்கள் சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் சூரம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

Similar News