உள்ளூர் செய்திகள்
கொலை

ஆப்பக்கூடல் அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை

Published On 2022-02-11 12:32 IST   |   Update On 2022-02-11 12:32:00 IST
ஆப்பக்கூடல் அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவியின் தந்தை மற்றும் அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் வெங்கடேஷ் (23) பெயிண்டர்.

ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டி என்ற பகுதியில் வெங்கடேசின் பாட்டி வீடு உள்ளது. இங்கு அடிக்கடி வெங்கடேஷ் சென்று வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் என்பவரது மகள் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

வெங்கடேஷ் அந்த மாணவியை 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கடந்த 8-ந்தேதி இரவு இதுதொடர்பாக வெங்கடேஷ் தரப்புக்கும் மாணவியின் பெற்றோர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டார். இதையடுத்து அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை சரவணன் (37), அவரது அத்தை சித்ரா (45) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News