உள்ளூர் செய்திகள்
சிவரஞ்சனியின் பாரம்பரிய நெல் சேகரிப்பு பணியை பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

பாரம்பரிய நெல் விதைகளை ஆவணப்படுத்தும் பெண் விவசாயி

Published On 2022-02-10 15:12 IST   |   Update On 2022-02-10 15:12:00 IST
வேதாரண்யத்தில் அருகே பாரம்பரிய நெல் விதைகளை ஆவணப்படுத்தும் பெண் விவசாயி பெயரை கின்னஸில் இடம் பெற செய்ய பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வந்தார். அங்கு பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி சரவணகுமார் 1250 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டுள்ளதை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனிசரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1250 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் 1250 பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்துள்ளனர். அதனை தற்போது அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.1250 வகையான நெல்மணிகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்களை அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வருகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு அதனை காட்சிப்படுத்தி வருகின்றனர். 
இவர்களது மீட்டெடுப் புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய&மாநில அரசுகள் கின்னஸில் இடம் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவையான தொழில் நுட்பங்களையும் ஆலோசனைகளையும் உடனடியாக வேளாண் பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்து உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி விதை பரவலாக்க திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக திட்டமிட முன்வரவேண்டும். குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
 
தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஆவணப் படுத்துவதற்ககான முழு செலவையும் அரசே எற்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மகசூல் இழப்பை கருத்தில் கொண்டும், மருத்துவ குணத்தை கவனத்தில் கொண்டும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும். 

அதனை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு கூடங்களில் உணவுப் பொருட்களாக பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர் அசோகன், வேதாரண்யம் ஒன்றிய தலைவர் கருணைநாதன், செய்தி தொடர்பாளர் மணிமாறன், இயற்கை வேளாண் ஆர்வலர் சிவாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News