உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனை

Published On 2022-02-10 13:21 IST   |   Update On 2022-02-10 13:21:00 IST
ஈரோடு கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தைக்கு  வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். 

இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர். 

இதன் காரணமாக  மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று நினைத்து நிலையில் மாறாக கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

இதேபோல் இந்த வாரமும் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு வசதியாக மாட்டுச்சந்தை வளாகத்திலேயே கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் ஏற்படுத்தப் பட்டு இருந்தது.

அதில் வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டனர். 

இன்று கூடிய சந்தையில் 400 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 100 கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 

இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை நடந்தது. சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்து செல்லலாம் என கூறப்பட்டு இருந்தது.

Similar News