உள்ளூர் செய்திகள்
நாளை முதல் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து கிராம மக்கள் போராட்ட அறிவிப்பு
சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் நாளை முதல் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தாளவாடி:
தென்னிந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழ்நாட்டின் 4-வது புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது.ஆயிரத்து 455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகத்தின் தலமலை வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் திம்பம், ஆசனூர்-காரப்பள்ளம் வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த பாதை உள்ளது.
இந்த மலைப்பாதையில் யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, அரிய வகை புள்ளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன. தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.
அண்மையில் தாளவாடி, திம்பம், ஆசனூரில் சிறுத்தை சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. எனவே சத்தியமங்லகம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்தின் சூழல் தன்மையைத் தொடரவும் தமிழ்நாடு- கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுநேர போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்த உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 2019-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவை நாளை 10-ந் தேதி அமல்படுத்த வேண்டும் என சென்னை தலைமை உயர் நீதிபதி அடங்கிய மற்றொரு அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு அரசியல் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி கிராம மக்கள் கூறியதாவது, ‘‘வனவிலங்கு பாதுகாப்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்து இதைப் பார்க்கக் கூடாது. இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைப்பார்க்க வேண்டும். பொதுவாக காய்கறிகள் மாலை 6 மணிக்கு மேல்தான் தாளவாடி பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இரவுநேர போக்குவரத்தைத் தடுத்தால், பகல் போக்குவரத்தும் தானாகவே முடங்கும். இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது.
எனவே வனவிலங்கு பாதுகாப்பை வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் உறுதி செய்யலாம். அதாவது வனச்சாலையில் வனவிலங்குகள் இறப்பதை தடுக்க சாலையின் இருபுறமும் 20 அடி அகலத்திற்கு முட்புதர்களை வெட்டினால் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பொழுது வாகனங்களுக்கு நன்றாக தெரியும்.
அப்போது வனவிலங்குகள் விபத்து தவிர்க்கப்படும். மேலும் வனவிலங்குகள் சில இடங்களில் மட்டும் சாலையை கடக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சீனாவில் உள்ளது போல் மேம்பாலங்கள் அமைத்து வாகன விபத்தை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையின் இருபுறமும் அகழிகள் அமைத்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் வனவிலங்கு உயிரிழப்புகள் காப்பாற்றப்படும்.
நாடும் வளர வேண்டும் காடும் வளர வேண்டும் வனவிலங்குகளும் வளர வேண்டும் என்பதுதான் மலைமக்களின் கோரிக்கை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் சத்தியமங்கலம்- திம்பம் மலைப்பாதையில் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர போக்குவரத்து தடை அமலுக்கு வருகிறது. இதை கண்டித்து தாளவாடி மலை கிராம மக்கள் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் பண்ணாரி சோதனை சாவடி அருகே குடும்பத்துடன் திரண்டு வந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்களும் நாளை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.