உள்ளூர் செய்திகள்
விற்பனைக்காக வைக்கபட்டிருந்த அரசியல் கட்சியினர் சேலைகள்

ஈரோடு கனிமார்க்கெட்டில் ஒரு வாரத்தில் அரசியல் கட்சியினர் வேட்டி-சேலை ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

Published On 2022-02-09 15:40 IST   |   Update On 2022-02-09 15:40:00 IST
ஈரோடு ஜவுளி சந்தையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகொடி கலர் பொரித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஈரோடு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் துண்டு, மப்ளர், தொப்பி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

ஈரோடு ஜவுளி சந்தையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகொடி கலர் பொரித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சேலையை பொறுத்தவரை ரூ.150-க்கும் வேட்டி ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மப்ளர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-

கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2 வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் வி‌ஷயமாக சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்து வருகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர், தொண்டர்களை கவரும் வகையில் வேட்டி, சேலைகள் விற்பனை கடந்த ஒரு வாரமாக மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சத்திற்கு அரசியல் கட்சியினர் வேட்டி,சேலைகள், துண்டு, மப்ளர் போன்றவை விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News