உள்ளூர் செய்திகள்
கம்பனூர் காலனியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருப்பதை காணலாம்

ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்- தெர்மல் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு

Published On 2022-02-08 15:37 IST   |   Update On 2022-02-08 15:37:00 IST
கம்பனூர் காலனியில் வனத்துறையினர் நேரில் சென்று அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனசரகத்துக்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, மான் மற்றும் சிறுத்தைகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியையொட்டி கிராம பகுதிகளில் பொது மக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் அந்த பகுதிகளில் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வருகிறார்கள். வனப்பகுதியையொட்டி கிராமங்களில் சிறுத்தை மற்றும் மர்ம விலங்குகள் அடிக்கடி புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது என பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த நாயை இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.

இது குறித்து மக்கள்கூறும் போது, இந்த பகுதியில் வன விலங்கு உள்ளே வராமல் இருக்க அகழி வெட்டப்பட்டு உள்ளது. இந்த அகழியை தாண்டி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வந்து கால்நடை மற்றும் நாய்களை வேட்டையாடி வருகிறது. எனவே வன விலங்குகளை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கம்பனூர் காலனியில் வனத்துறையினர் நேரில் சென்று அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கம்பனூர் காலனியில் வசிப்பவர்கள் விளாங்கோம்பை வன செக்போஸ்ட் அருகே வசித்து வருகின்றனர். இப்பகுதி வனத்தை ஒட்டியே அமைந்துள்ளதால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்த பகுதியில் வெட்டப்பட்டுள்ள அகழியை தாண்டியும் சிறுத்தை கிராமங்களுக்குள் வருகிறது. எனவே வன பகுதியில் மக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

வனத்தை யொட்டிய பகுதியில் வசிப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறை ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் கூறும்போது, இந்த பகுதியில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை கைஅடக்க தெர்மல் கேமரா மூலமும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் விலங்குகளையும் கண்காணிக்க முடியும். அதன் பிறகு மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.



Similar News