உள்ளூர் செய்திகள்
ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் மரவள்ளி சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்
ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் கூறியதாவது:-
மாவட்டத்தில், மரவள்ளி கிழங்கு, 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ளனர். இப்பயிர் மலைப்பகுதி, மானாவாரி நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவதால், சத்து குறைபாடு ஏற்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மண் வளம் பாதிக்கிறது. இதனை தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவிலும், சம விகிதத்திலும் அளிக்க வேண்டும்.
ஹெக்டேர் பரப்பில் ஒரு முறை மரவள்ளி சாகுபடி செய்தால் சராசரியாக, 90 கிலோ சாம்பல் சத்து மண்ணில் உறிஞ்சப்படும்.
இச்சத்து, பயிர்களில் புரதம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு சத்துக்களின் ஒரு அங்கமாக மட்டுமின்றி, பயிரின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.
இலைகளில் உற்பத்தி செய்யப்பட்டகார்போ ஹைட்ரேட், பயிரின் மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்ல உதவும். மணற்பாங்கான நிலங்கள், ஒரே நிலத்தில் தொடர்ந்து மரவள்ளி சாகுபடி செய்வதன் மூலம் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இப்பற்றாக்குறையால் பயிர், தண்டின் வளர்ச்சி குறைந்து, இலைகள் சிறுத்து போகும். அதிகளவு பற்றாக்குறை இருப்பின், அடி இலைகளின் நுனிப்பகுதியில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி, இலைகள் கீழ்நோக்கி வளைந்து காணப்படும். தண்டின் மேல் மட்ட பகுதியில் சிறு வெடிப்பு தோன்றி, பயிர்கள் முதிர்ச்சி அடைந்தது போல காணப்படும்.
தண்டின் கணு இடைப்பகுதிகள் சிறுக்கும். இக்குறைபாட்டை சரி செய்ய பொட்டாஷ் கரைசலை, 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். நுண்ணு£ட்ட சத்தாக இரும்பு, துத்தநாக சத்து குறைபாடும் மரவள்ளியில் அதிகம் தென்படுகிறது. நுண் சத்து குறைபாடானது கார அமிலத்தன்மை, 8:0க்கு அதிகமாக உள்ள நிலங்களில், தென்படுகிறது.
இரும்பு சத்து குறைபாட்டால் இளம் இலைகள் பச்சையம் இழந்து காணப்பட்டு, இலைகள் வௌறியும், இலை நரம்புகள் அடர் பச்சை நிறத்துடனும் காணப்படும். குறைபாடு தீவிரமடையும்போது, இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகி, வெண் நிறத்தில் காட்சியளிக்கும்.
இதை தவிர்க்க, ஒரு சதவீதம் இரும்பு சல்பேட்டை கரைசலை ஒட்டும் திரவம் கலந்து, 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். துத்தநாக சல்பேட்டை கரைசல், 0.5 சதவீதம் அல்லது, 50 கிராம் துத்தநாக சல்பேட்டை, 10 லிட்டர் தண்ணீருடன் ஒட்டும் திரவம் கலந்து,15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். இந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம், மரவள்ளி கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.