உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் 28.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-02-06 14:14 IST   |   Update On 2022-02-06 14:14:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், 2--ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் நேற்று 496 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 9,500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

இதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 89.6 சதவீதம் பேர், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2-வது தவணையினை 68 சதவீதம் 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் என மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News