உள்ளூர் செய்திகள்
நஞ்சை புளியம்பட்டியில் வனத்துறையினர் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமிரா.

மர்ம விலங்கு நடமாட்டத்தை கேமிரா அமைத்து கண்காணிப்பு

Published On 2022-02-01 13:00 IST   |   Update On 2022-02-01 13:00:00 IST
டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கேமிராஅமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கேமிராஅமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

டி.என்.பாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் மர்ம விலங்கு கடித்து சரவணன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், ஒரு சேவல் உயிரிழந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், தெரு நாய்கள் கடித்ததாலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் ஏற்கனவே ஆடுகளை கடித்து கொன்ற பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு நடமாட்டத்தை பார்த்ததாக அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடமான நஞ்சை புளியம்பட்டி சென்று மர்ம விலங்கு தென்பட்டதாக சொல்லும் இடங்களில் கால் தடங்களை பதிவு செய்தும், 2 இடங்களில் கேமிராக்களை பொருத்தியும் உள்ளனர்.

மர்ம விலங்கு தென்பட்ட பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் அருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். மேலும் பவானி ஆற்றின் கரையோரமாக கிராமம் அமைந்துள்ளது. 

இதனால் புலிகள் காப்பக பகுதியில் இருந்து சிறுத்தை வந்து இருக்கலாம்? என கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Similar News