உள்ளூர் செய்திகள்
சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் கருங்கல்பாளையம் காவிரி ஆறு.

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சேறும்-சகதியால் புனித நீராட முடியாமல் பொதுமக்கள் அவதி

Published On 2022-02-01 11:14 IST   |   Update On 2022-02-01 11:14:00 IST
ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட சகதியில் இறங்கி சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலர் புனித நீராட முடியாமல் சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. இந்த பகுதியில் அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி செல்வார்கள்.

மேலும் அந்த பகுதியில் மயானம் உள்ளதால் இறந்தவர்களை அடைக்கம் செய்து விட்டு வருபவர்கள் ஆற்றில் குளித்து விட்டு செல்வது வழக்கம். அதே பகுதியில் ஈம காரியங்களும் செய்யப்படுகிறது.

மேலும் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பலர் ஆற்றில் குளித்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து திதி மற்றும் தர்ப் பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட சகதியில் இறங்கி சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலர் புனித நீராட முடியாமல் சென்றனர்.

தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்ததால் முதியவர்கள் சிலர் சேற்றில் கால் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இன்னும் சிலர் சிரமப்பட்டு உள்ளே இறங்கி புனித நீராடினர். இதே நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.

எனவே கருங்கல்பாளையம் காவிரி கரையோர பொதுமக்கள் இறங்கி புனித நீராட அந்த பகுதியில் படித்துறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News