உள்ளூர் செய்திகள்
கொடுமுடி யூனியன் அலுவலக பணியாளர்கள்-கவுன்சிலர்கள் இடையே பேச்சுவார்த்தை
கொடுமுடி யூனியன் அலுவலக பணியாளர்கள்-கவுன்சிலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி யூனியன் அலுவலக பணியாளர்கள்-கவுன்சிலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது.
கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 24-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரை தாக்க முயன்றதாகவும், அலுவலக பணியாளர்களை பணி செய்ய இடையூறு செய்வதாகவும் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு 1-வது வார்டு உறுப்பினர் டி.பழனிசாமி, 2-வது வார்டு உறுப்பினர் எம்.ஏ.பழனிசாமி, 4-வது வார்டு உறுப்பினர் பரமசிவம் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் சி.வளர்மதியின் கணவர் சின்னுசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் அனைவரும் கையெழு த்திட்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி 24-ந் தேதி முதல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல் கவுன்சிலர்கள் தரப்பிலும் மேலாளர், மற்றும் பணியாளர்கள் மீது கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் கொடுமுடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட துணை கண்காணிப்பாளர் கவுதம் கோயல் நேரடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதன் தொடர்ச்சியாக இரவு சுமார் 10 மணியளவில் எதிர் தரப்பை சேர்ந்த 1,2, 4, வார்டு கவுன்சிலர்கள், 5 வது வார்டு கவுன்சிலர் சி.வளர்மதியின் கணவர் சின்னுசாமி ஆகியோரை வரவழைத்து கொடுமுடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் உதவியாளர் ஜெகதீசன், மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் அலுவலக பணியாளர்களும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது, கவுன்சிலர்கள் தங்கள் சந்தேகங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிடுவது எனவும் 2 தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டது.