பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.80 அடியாக குறைந்தது
ஈரோடு:
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையின் மூலம் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் விளங்கி வருகிறது. அங்கு மழைப்பொழிவு இருந்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.
கடந்த ஆண்டில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் 2 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.
இதற்கிடையே கடந்த 25-ந்தேதியுடன் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.