உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 25.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாரதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாரதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல்அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், வாலிபர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது.
2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். தற்போது மீண்டும் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. எனினும் மாவட்டத்தில் தற்போது வரை தினமும் 4ஆயிரம் முதல் 4,500 வரை மட்டுமே தினசரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 25லட்சத்து 58 ஆயிரத்து 409பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.