உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் பரிசோதனை செய்பவர்களில் 27 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி

Published On 2022-01-25 12:10 IST   |   Update On 2022-01-25 12:10:00 IST
ஈரோட்டில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 27 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோட்டில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 27 சதவீதம் பேருக்கு  தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு நாள்  பாதிப்பானது 22 பேருக்கு இருந்து வந்த நிலையில், நேற்று நிலவரப்படி ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 1199 ஆக உயர்ந்துள்ளது.

காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

ஒரு சிலர் பரிசோதனைக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று வரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 6,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 721 பேர் இறந்துள்ளனர். 

இதனிடையே தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையை மருத்துவத் துறை அதிகப்படுத்தி உள்ளது.

கொரோனா அறிகுறி களுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் தொழிற்சாலைகள், பொது இடங்களில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்படுகின்றது. 

தொடக்கத்தில் பரிசோதனை மாதிரிகள் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதிரிகள் எடுக்கும் எண்ணிக் கையானது 2 மடங்காக அதிகரிக்கப்பட்டு ள்ளது. 

நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 27.8 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு வருகிறது. 

இதனால் அனைத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், சளி என சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இன்னும் 2 வாரத்திற்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வலியுறுத் தியுள்ளனர்.

Similar News