உள்ளூர் செய்திகள்
கைதான விக்னேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

ஈரோட்டில் 10 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2022-01-24 12:39 IST   |   Update On 2022-01-24 12:39:00 IST
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு சூளை பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனங்கள் திருட்டுபோனது. அது சம்பந்தமாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வீரப்பன்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் சித்தோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(23) என்பது தெரியவந்தது. மேலும் சூளையில் மோட்டார் சைக்கிள் திருட்டு போன வழக்கில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவமும் விக்னேஷ்குமார் உருவமும் ஒத்துப்போனதை போலீசார் கண்டுபிடித்தனர். 

அவரிடம் போலீசார் மேற்கண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் விக்னேஷ்குமார் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ்குமாரிடம்  இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதன் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News