உள்ளூர் செய்திகள்
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில் ஜிகினா மாலைகள் அணிவிக்க தடை
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில் ஜிகினா மாலைகள் அணிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. இது, ஆசிய அளவில் பெரிய சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கி 2 நாட்கள் நடைபெறும்.
திருவிழாவின்போது, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக விலை உயர்ந்த, வண்ணமயமான ஜிகினா மாலைகளை வாகனங்களில் கொண்டு வந்து குதிரை சிலைக்கு அணிவிப்பர். திருவிழவின்போது, 2000க்கும் மேற்பட்ட மாலைகள் அணிவிக்கப்படும்.
நடப்பாண்டு வரும் 17&ந் தேதி திருவிழ நடைபெற உள்ளது. இதையடுத்து, கோவிலை சுற்றிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களைக் கொண்டு கடந்த 2 நாட்களாக உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாசிமகம் திருவிழா ஏற்பாடுகள் குறித்து, குளமங்கலம் வடக்கு, தெற்கு கிராமங்களை சேர்ந்த விழா குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஜிகினா உட்பட ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு கடுமையாக்கி வருவதால், குதிரை சிலைக்கு ஜிகினா மாலைக்கு பதிலாக காகித மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.