உள்ளூர் செய்திகள்
ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா
ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு வழியாக தினமும் 100&க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ரெயில்நிலையத்தில் ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு ரெயில்நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் சென்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தன்பாத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வழக்கம்போல் வந்தது.
அப்போது ஈரோடு ரெயில்வே போலீசார் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது டி2 பெட்டியில் சோதனை நடத்திய போது அங்கு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
அந்த பையை திறந்து பார்த்தபோது அதனுள் 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கஞ்சா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் தங்களுக்கு இது குறித்து தெரியாது என பயணிகள் தெரிவித்துவிட்டனர்.
பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் கோவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட மர்மநபர் கஞ்சாவை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட் டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.