ஈரோடு சூளை பகுதியில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு: மது பாட்டில்கள் எரிந்து சேதம்
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியில் பாருடன் கூடிய ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
இன்று காலை கடையை ஊழியர்கள் திறந்தனர். அப்போது கடையில் அட்டைப் பெட்டியில் இருந்த 350-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மர்ம நபர்கள் 2 பேர் வருவதும், பின்னர் அவர்கள் பெட்ரோல் ஊற்றி மதுக்கடையில் தீ வைத்ததும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து மதுக்கடையை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார் கள். மேலும் இந்த தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் எரிந்து சேதமானது.