உள்ளூர் செய்திகள்
பவானி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற 85 பேருக்கு நோட்டீஸ்
பவானி ஆற்றங்கரையோரம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் 85 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சத்தியமங்கலம்:
பவானி ஆற்றங்கரையோரம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் 85 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
பவானி ஆற்றங்கரையோரம் ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது. கரையோர பகுதிகளில் விவசாய நிலங்களில் விவசாயிகள் சோளம், நெல், மஞ்சள் மற்றும் கரும்பு உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடும் போது கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் வரை ஆற்றங் கரையோரம் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் சிலர் ஆக்கரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.
மேலும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே பவானி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருபவர்களை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பவானிசாகர் அணை முதல் சத்தியமங்கலம் ஆற்றுப் பாலம் வரை சுமார் 15 கி.மீட்டர் தூரத்துக்கு ஆற்றின் இருகரைகளிலும் தாழ்வான பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசிப்பவர்கள், நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வோர் என மொத்தம் 85 பேருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தானாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகள் உத்தரவுப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.