உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது.
ஈரோடு:
வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது.
ஈரோடு வ. உ. சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தினமும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, தர்மபுரி, கர்நாடக மாநிலம் கோலார் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவில் வரத்தாகி வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தக்காளி வரத்து திடீரென குறைந்தது. தினமும் 5 ஆயிரம் பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் வெறும் 1,500 பெட்டிகள் மட்டுமே வந்தன.
இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பின்னர் படிப்படியாக நிலைமை சீராகி தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 4 ஆயிரம் பெட்டிகள் தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. 13 கிலோ கொண்ட சின்ன பெட்டி ரூ.150 வரை விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.350 வரை விற்பனையானது.