உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட வளர்மதி-கைதான ராஜா என்கிற நிக்கோலஸ்.

பவானி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவியை குத்தி கொன்ற வாலிபர் கைது

Published On 2022-01-21 10:12 IST   |   Update On 2022-01-21 10:12:00 IST
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவியை குத்திக்கொன்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தோடு:

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் கே.கே.நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் கணேசன். ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி (55). இவர்களுக்கு சிவரஞ்சனி, சிவசங்கரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன் நேற்று பென்சன் தொடர்பாக பவானிக்கு சென்று விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது வீட்டில் அவரது மனைவி வளர்மதி மட்டும் தனியாக இருந்தார்.

கணேசன் செல்போன் மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. செல்போனை அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து சந்தேகம் அடைந்த கணேசன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது. மேலும் டி.வி. ரிமோட் மற்றும் அவரது மனைவி வளர்மதியின் செல்போன் ஆகியவை உடைந்து காணப்பட்டது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது ஒரு அறையில் வளர்மதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் அலறி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இந்த கொலை குறித்து சித்தோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கனகேஸ்வரி, பாலாஜி, பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகய்யா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொலை நடந்த வீட்டிற்கு துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் மெயின் ரோடு வரை ஓடி நின்றது.

இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மர்மநபர் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் பவானி லட்சுமி நகரை சேர்ந்த தன்ராஜ் என்பவரது மகன் ராஜா என்கிற நிக்கோலஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

அப்போது நிக்கோலஸ் பவானி காலிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகைய்யா விரைந்து சென்று நிக்கோலசை பிடித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் வளர்மதியை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகையுடன் தப்பி செல்ல திட்டமிட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் நிக்கோலசை கைது செய்தனர். பின்னர் நிக்கோலஸ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கொலை செய்யப்பட்ட வளர்மதி வீட்டின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நான் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி பேராசிரியர் கணேசனிடம் படித்தவர். மேலும் எனது மாமா எட்வின் சுந்தரம் என்பவரும் பேராசிரியர் கணேசனும் நண்பர்கள்.

இதனால் நான் பேராசிரியர் கணேசன் மற்றும் அவர் குடும்பத்தினருடன் சகஜமாக பழகி வந்தேன். எனக்கு அவசரமாக ரூ.3 ஆயிரம் தேவைப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணி அளவில் கணேசன் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரது மனைவி வளர்மதி மட்டும் தனியாக இருந்தார்.

அவரிடம் நான் அவசர தேவையாக ரூ.3 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு வளர்மதி தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்தார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நான் இவ்வளவு வசதியாக இருந்து கொண்டும் ரூ3 ஆயிரம் கடனாக தரமாட்டியா என்று கோபம் அடைந்தேன். அப்போது அவரது வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து ஆத்திரத்தில் வளர்மதியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிகொடி மற்றும் மற்றொரு செயின் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியேறினேன். திருடிய நகைகளை எங்கேயாவது விற்றுவிட்டு மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டேன். அப்போது காலிங்கராயன் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்த போது போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News