உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் பலி

Published On 2022-01-20 10:06 GMT   |   Update On 2022-01-20 10:10 GMT
பாளை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் ஒருவர் பலியானார்.

நெல்லை:

பாளை அருகே உள்ள மணக்காடு பகுதியில் கோவில் கொடைவிழா நடந்து வருகிறது. இதற்காக தூத்துக்குடியில் இருந்து யானையை அழைத்து வந்தனர்.

யானையை பாகன் அழைத்து வரும் போது தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்ற வாலிபரும் யானை பாகனுடன் நடந்து வந்துள்ளார்.

நேற்று மாலை யானை பாகன் யானையை திருமலை கொழுந்துபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க வைத்தார்.

அப்போது அவருடன் நடந்து வந்த கார்த்திக் என்ற வாலிபரும், தாமிபரணி ஆற்றில் குளித்துள்ளார். இதில் திடீரென்று அவர் ஆழமான பகுதியில் மூழ்கினார்.

யானை பாகன் காப்பாற்றும்படி அலறியதால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து தேடினார்கள். ஆனால் அதற்குள் கார்த்திக் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் கிடைக்கவில்லை.

இன்று காலை அந்த பகுதியில் பாளை தீயணைப்பு வீரர்கள் சென்று தேடினார்கள். அப்போது அவர்கள் பலியான கார்த்திக் உடலை மீட்டனர்.

பலியான கார்த்திக் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பாகனுடன் நடந்து பாளை வந்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News