உள்ளூர் செய்திகள்
ரூ.2 கோடி நில மோசடி வழக்கு: அ.தி.மு.க. பிரமுகர் சிக்கினார்
ஈரோட்டில் ரூ.2 கோடி நில மோசடி வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க.பிரமுகர் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது-.
ஈரோடு:
ஈரோட்டில் ரூ.2 கோடி நில மோசடி வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க.பிரமுகர் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது-.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70ஆயிரம் வீதம் ரூ.2கோடி வரை வசூல் செய்து மோசடி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடந்த மாதம் ஈரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அ.தி.மு.க., கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், சங்கத்தின் பொருளாளரும் அ.தி.மு.க. வார்டு செயலாளருமான ஈரோடு இந்திராநகரை சேர்ந்த வைரவேல்,
சங்க துணை தலைவரும், அ.தி.மு.க, வார்டு செயலாளருமான குணசேகரன், துணை செயலாளரும், அ.தி.மு.க. உறுப்பினருமான ஆறுமுகம், பி.பி.கே.பழனிச்சாமியின் 2&வது மனைவி மேகலா, முருகசேகர் மனைவி சாந்தி, குணசேகரன் மனைவி ஜோதிமணி, ஆறுமுகம் மனைவி ரேவதி, வைரவேல் மனைவி ஜெயந்தி, பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் ஆகிய 11பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் வைரவேல், வினோத்குமார், ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனிப்படை போலீசிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.