உள்ளூர் செய்திகள்
வேலூர் காகிதப்பட்டறையில் பெண் குழந்தை குப்பையில் வீச்சு
வேலூர் காகிதப்பட்டறையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை குப்பையில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலணி டாஸ்மாக் கடை அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தை அழும் குரல் கேட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்தது. குழந்தையை மீட்ட பொதுமக்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. பெண் குழந்தையை வீசி சென்றது யார் என தெரியவில்லை.
108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து பச்சிளம் பெண் குழந்தையை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.