உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கொரோனா பரவல் காரணமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மூடல்

Published On 2022-01-17 15:35 IST   |   Update On 2022-01-17 15:35:00 IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு என்ற இடத்தில் 215 ஏக்கர் பரப்பளவில் இந்த பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது.  இந்த பறவைகள் சரணாலயம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். 

இந்த காலகட்டத்தில் பெலிகான், கொசுஉல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல்நாரை, வெண்மார்பு மீன்கொத்திபறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கிறது.

இதில் கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும் கொசுஉல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது. 

மேலும்  இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் சீசன் கால கட்டத்தில் இங்கு வந்து செல்லும். 

இந்த பறவைகளை காண்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சேலம், கோவை, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருவார்கள். 

மேலும் வெளிநாட்டு பயணிகளும் அதிகளவில் வருவார்கள். தினமும் காலை முதல் மாலை வரை பறவைகள் சரணாலயத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனாதாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. 

மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சரணாலயம் முன்பு அறிவிப்பு பலகையும் வனத்துறை சார்பில் வைக் கப்பட்டுள்ளது.

Similar News