உள்ளூர் செய்திகள்
சீமான்

முகக்கவசம் அணியாததற்கு வாலிபரை சித்ரவதை செய்வதா? போலீசாருக்கு சீமான் கண்டனம்

Published On 2022-01-17 06:10 GMT   |   Update On 2022-01-17 06:10 GMT
காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் அதிகார அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கான சேவையை உறுதி செய்ய வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும் என சீமான் கூறியுள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் பணி செய்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஹீமை முகக்கவசம் அணியாத ஒற்றைக் காரணத்திற்காக, கடுமையாகத் தாக்கிவதைத் திருப்பதும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அடக்கு முறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

காவல் துறையை முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டியதும், காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் அதிகார அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கான சேவையை உறுதி செய்ய வேண்டியதும் காவல் துறையைத் தன்வசம் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலினின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.



ஆகவே, அப்துல் ரஹீம் மீது பொய்யாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய காவல்துறையினர் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட ரஹீமுக்கான மருத்துவச்சிகிச்சைக்குரிய செலவுகளை ஏற்று, அவருக்குரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News