சபரிமலைக்கு சென்று திரும்பிய அய்யப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து 9 பேர் படுகாயம்
பெரியகுளம்:
ஈரோடு காந்திநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் லோகநாதன். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 38), மோகன் (23), கதிரவன் (38), வடிவேல் (45), ரவி (57), முருகன் (35), ரகு (30), குமரேசன் (38), பூவரசன் (23) ஆகியோர் சபரிமலைக்கு மாலை அணிந்து சாமி தரிசனம் செய்ய சென்றனர். மகரஜோதி தரிசனத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சொந்த ஊருக்கு வேனில் திரும்பிக்கொண்டு இருந்தனர். வேனை ஈரோடு லட்சுமிநகரை சேர்ந்த விஸ்வநாதன் (25) என்பவர் ஓட்டிவந்தார்.
வேன் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி வெள்ளைக்கரடு முனியாண்டி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.