உள்ளூர் செய்திகள்
ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும்பொங்கல் நிகழ்ச்சிக்கு தடை
முழுஊரடங்கு காரணமாக இன்று ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும்பொங்கல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
முழு ஊரடங்கு காரணமாக இன்று ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல்பண்டிகையின் முக்கிய விழாவாக காணும் பொங்கல் உள்ளது. காணும்பொங்கல் அன்று மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று பொழுதைக்கழிப்பது வழக்கம்.
ஈரோடு மாவட்டத்திலும் காணும்பொங்கல் களைகட்டும். முக்கிய சுற்றுலாதலங்களில் மக்கள்கூட்டம் கூட்டமாக சென்று பொழுதைக்கழிப்பார்கள். மாநகரில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் நடைபெறுவது வழக்கம்.
காணும்பொங்கலையொட்டி அதிகாலை முதலே பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் கூடுவார்கள். அங்கு பாட்டுப்போட்டி, நடனப் போட்டி என களை கட்டும்.
பெண்கள் பாரம்பரிய விளையாட்டான பாண்டி, ஒயிலாட்டம், கோலாட்டம், மியூசிக்கல் சேர், தாயம் போன்ற விளையாட்டை விளையாடி பொழுதை உற்சாகமாக கழிப்பார்கள்.
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் எங்கு பார்த்தாலும் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். பெரியவர்கள் விதவிதமான சேலைகளுடனும், இளம்பெண்கள் பட்டுதாவணியுடன் வருவார்கள்.
ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று முழுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் இன்று பெண்கள் காணும்பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வ.உ.சி.பூங்கா களை இழந்து காணப்பட்டது. இதனால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வ.உ. சி. பூங்கா நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.