உள்ளூர் செய்திகள்
அம்மாபேட்டை அருகே முகாசிப்புதூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சி.

15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரிய ஏரி

Published On 2022-01-16 12:55 IST   |   Update On 2022-01-16 12:55:00 IST
அம்மாபேட்டை அருகே கனமழை காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே  கன மழை காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிப்புதூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அதிக மழை பெய்யும் காலங்களில் இந்த ஏரி நிரம்பி வழிவது உண்டு 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பெரிய ஏரி கடந்த 15 வருடங்களாக நிரம்பவில்லை. அவ்வப்போது பெய்யும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும்.

கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அருகில் உள்ள ஏரிகள் நிரம்பிய போதிலும் இந்த பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாமல் பாதியிலேயே நின்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை யின் காரண மாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து சித்தார் ஓடை வழியாக வந்த தண்ணீர் பெரிய ஏரிக்குள் புகுந்தது.
 
இதனால் கடந்த 15 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பி செல்கிறது. இந்த தண்ணீரின் மூலம் முகாசிப்புதூர், பூனாச்சி கன்னப்பள்ளி ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும். 

மேலும் நிலத்தடி நீர்மட்டம் அப்பகுதியில் அதிகரிக்கும். இதனால் வானம் பார்த்த பூமிகளும் பயனடையும் நிலை உள்ளது.

15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியே செல்வதால் அப்பகுதி மக்கள்  கூட்டமாக வந்து ஏரியை பார்த்து செல்கின்றனர். 

மேலும் ஏரி நிரம்பியதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News