உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காய்கறி பயிர்கள் நடவு சீசன் தீவிரம் - நாற்றுகள் விற்பனை அதிகரிப்பு

Published On 2021-12-25 07:35 GMT   |   Update On 2021-12-25 07:35 GMT
தொடர் மழையால், பண்ணைகளில் நாற்றுக்கள் தேங்கின. குறிப்பிட்ட காலத்தில் நடவு செய்யாமலும் மழையில் நனைந்தும் வீணாகியது.
மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட நாற்றுக்களை சுற்றுப்பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட நாற்றுப் பண்ணைகளில் வாங்கி விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.

நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும் தலா 7லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரமும், மிளகாய் 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிபிளவர், 10 ஆயிரம் நாற்றுக்கள் தேவை உள்ளது.

இப்பண்ணைகளில் குழித்தட்டுகளில் விதைகள் நடவு செய்து நாற்றுக்கள் வளர்க்கப்படுகிறது. இதில் தக்காளி 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள் 30 நாட்களுக்குள்ளும், விளைநிலத்தில் நடவு செய்ய வேண்டும். நடப்பாண்டு வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகரித்து தொடர் மழையால் காய்கறி சாகுபடி பாதித்தது.

நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. உற்பத்தி குறைவால் காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மழை இல்லாததால் காய்கறி சாகுபடி தீவிமடைந்துள்ளது. 

நாற்றுப்பண்ணைகளில் இருந்து விவசாயிகள் நாற்றுக்களை வாங்கி நடவு செய்து வருவதால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்படும் செடிகள் ஒரு மாதத்திற்குள் மகசூல் கொடுக்க தொடங்கும் என்பதால் ஜனவரி மாதம் காய்கறி வரத்து அதிகரித்து விலை குறையும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:

தொடர் மழையால், பண்ணைகளில் நாற்றுக்கள் தேங்கின. குறிப்பிட்ட காலத்தில் நடவு செய்யாமலும் மழையில் நனைந்தும் வீணாகியது. தற்போது மழை குறைந்துள்ளதால் மீண்டும் காய்கறி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இதனால் நாற்று விற்பனை அதிகரித்துள்ளது. தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் அதிகளவு விற்பனையாகிறது. ஒரே சமயத்தில் நடவு அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News