உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகராட்சி பள்ளி மாணவிகளுக்கு 1000 முககவசங்கள்
திருவண்ணாமலை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு முதல்கட்டமாக தரமாக தயாரிக்கப்பட்ட 1000 முக கவசங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் உருமாறி 3-வது அலையாக ஓமைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. தமிழகத்திலும் பரவத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு அரசு மட்டும் தீர்வு காண முடியாது .சமூக அக்கறை கொண்ட பலரின் உதவியும் தேவைப்படுகிறது.
இதனைப் புரிந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் செயல்படும் ஒரு அரசு பள்ளியில் பகுதிநேர உடல் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் எஸ்.குணசீலன் என்பவர் அரசு பள்ளி மாணவிகளுக்கு 3000 முகக்கவசங்கள் வழங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு முதல்கட்டமாக தரமாக தயாரிக்கப்பட்ட 1000 முக கவசங்களை நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு முக கவசங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வக்கீல் ஷோபனா ராணி, தொழிலதிபர் கே.சுரேஷ், பொறியாளர் ஆர்.கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியை கல்பனா செய்திருந்தார்.