உள்ளூர் செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான மாணவி பிணமாக மீட்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான 8-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்குட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியனருக்கு யூட்டிகா (வயது 13) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். யூட்டிகா செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேரும் மழைநீர் வெளியேறுவதை வேடிக்கை பார்க்க நேற்று முன்தினம் மாலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர். அங்கு ரெட்டிப்பாளையம் மதகில் இருந்து வெளியேறிய வெள்ளம் விவசாய நிலையத்தில் பாய்ந்து சென்ற போது, யூட்டிகா வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனையறிந்த மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை இரவு முழுவதும் தேடினர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு பனைமரத்தின் கீழேயுள்ள பறாங்கல்லின் இடையே யூட்டிகா சிக்கி பிணமாக கிடந்தார்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து வெள்ளத்தில் மூழ்கி பலியான மாணவியின் உடலுக்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலஷ்மி மதுசூதனன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மாணவி பலியான சம்பவம் சாஸ்திரம்பாக்கம் கிராமத்திலும், அவர் படித்து வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியது.