உள்ளூர் செய்திகள்
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

பண்ருட்டி அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

Published On 2021-12-01 13:11 GMT   |   Update On 2021-12-01 13:11 GMT
பண்ருட்டி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் தனசேகர் (வயது 29), கூலி தொழிலாளி. கடந்த 20.1.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி, தனசேகர் வீட்டின் அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த தனசேகர், அந்த சிறுமியை நைசாக தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அவளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே நடந்த சம்பவம் பற்றி அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், தனசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை நல வாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News