செய்திகள்
ஊரக திட்ட தொழிலாளர்களை பருத்தி எடுக்க அனுமதிக்க வேண்டும் - சைமா கோரிக்கை
பின்னலாடை தொழிலுக்கு பருத்தி விளைச்சல், பஞ்சு உற்பத்தி, நூல் தயாரிப்பு ஆகியவை அடிப்படையாகும்.
திருப்பூர்:
பருத்தி எடுக்க ஊரக திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சைமா சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன், தமிழக முதல் - அமைச்சர், விவசாய துறை அமைச்சர், ஊரக வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பின்னலாடை தொழிலுக்கு பருத்தி விளைச்சல், பஞ்சு உற்பத்தி, நூல் தயாரிப்பு ஆகியவை அடிப்படையாகும். பருத்தி விளைச்சலை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
பருத்தி உற்பத்தியை பெருக்குவதன் மூலமாக தட்டுப்பாடு நீங்கும். இந்த சூழ்நிலையில் பருத்தி விவசாயிகளின் தகவலின்படி விளைச்சலை அதிகப்படுத்துவது சாத்தியமானாலும் பருத்தி செடியில் இருந்து பஞ்சு எடுப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தமிழக நிதி அமைச்சர் அறிவிப்பின்படி 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாட்களாகவும், தினசரி கூலியை உயர்த்தியும் வழங்கப்போவதாக செய்தி உள்ளது.
150 நாட்களாக உயர்த்தும்போது பருத்தி சாகுபடிக்கும், பருத்தி எடுப்பதற்கும் தொழிலாளர்களை அனுப்புமாறு விதிகளை மாற்ற வேண்டும். நூல் உற்பத்தி செய்யும் மில்கள் 50 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் நமது தேவைக்கு 5 சதவீதம் கூட பருத்தி விளைவதில்லை.
பருத்தி எடுப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.