குலசேகரம் அருகே கடையை உடைத்து 500 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு
திருவட்டார்:
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் சிங்காராயன் டோமினிக் (63) இவர் திருநந்திகரை கூட்டுறவு வங்கி அருகில் ரப்பர் சீட் உலற வைக்கும் குடோன் வைத்து இருக்கிறார். இவர சுமார் 21 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள சிறு ரப்பர் வியாபாரிகளிடம் இருந்து ரப்பர் சீட் வாங்கி உலர வைத்து அதை மொத்தமாக வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை ரப்பர் சீட் குடோனில் உலற வைத்து விட்டு இரவு குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலையில் குடோனில் வேலை பார்க்கும் தொழிலாளி வந்து பார்க்கும் போது குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடோன் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது குடோனில் உலர வைத்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 500 கிலோ ரப்பர் சீட் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே குலசேகரம் போலிசுக்கு தகவல் கொடுத்தார்.
தற்போது தினமும் இரவு நேரங்களில் சுமார் ஒரு மாதமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் சீட்டின் விலை உயர்ந்து உள்ளது. இதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு இரவு நேரங்களில் ரோந்து வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.