செய்திகள்
பள்ளி மாணவிகள்

சென்னையில் வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: 1 முதல் 8-ம் வகுப்பு வரை 100 சதவீதம் அனுமதி

Published On 2021-11-15 06:34 GMT   |   Update On 2021-11-15 06:34 GMT
சென்னையில் மழை பாதிப்புக்கு இடையே பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
சென்னை:

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படவில்லை.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 2-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த தீபாவளி பண்டிகையால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தீபாவளிக்கு பின்னர் வெளுத்து வாங்கிய கன மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கடுமையாக பாதித்தது. இதனால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழை குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதையடுத்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

மழைநீர் சூழ்ந்த பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களாக செயல்படுகின்ற பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு சென்றார்கள்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதனால் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர்.

சென்னையில் அரசு, உதவி பெறும் பள்ளி மற்றும் மாநகராட்சி, தனியார் மெட்ரிக்குலே‌ஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என 1,447 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் எம்.கே.பி. நகர் மற்றும் சைதாப்பேட்டையில் செயல்படும் அரசு பள்ளிகள் மற்றும் 42 மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 44 பள்ளிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படவில்லை. மற்ற அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

பள்ளிகளில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியரே விடுமுறை அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 44 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மழை பாதிப்புக்கு இடையே பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஒரு சில பள்ளிகளில் மதியம் வரை வகுப்பும், சில பள்ளிகளில் பிற்பகல் 3 மணி வரை வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வகுப்பில் அமர்ந்தனர். சளி, இருமல் போன்றவை காணப்பட்டால் அவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இன்று தான் பெரும்பாலான பள்ளிகள் முழு அளவில் செயல்படுகின்றன.

Tags:    

Similar News