செய்திகள்
திருத்துறைப்பூண்டியில், மழையால் உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் 700 மணல் மூட்டைகளால் சீரமைப்பு
திருத்துறைப்பூண்டியில் மழையால் உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் 700 மணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கின.
தகவலறிந்ததும் மாரிமுத்து எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் ராம்குமார், பிச்சன் கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மகாலிங்கம், துணை தலைவர் மகேஸ்வரி முருகானந்தம், பாசனதாரர்கள் சங்க தலைவர் கோவி சேகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்த வளவனாறு வாய்க்காலை பார்வையிட்டனர்.
இதையடுத்து வாய்க்கால் உடைந்த பகுதியில் 700 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைத்தனர். உடனடியாக வாய்க்கால் சீரமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மகாலிங்கம் தெரிவித்தார்.