செய்திகள்
கொலை

சிவகாசியில் வாலிபர் எரித்துக்கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2021-11-09 10:43 GMT   |   Update On 2021-11-09 10:43 GMT
சிவகாசியில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும், வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வத்திராயிருப்புக்கு சென்ற செல்வகணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் எரிச்சநத்தம் -விருதுநகர் சாலையில் கோட்டையம்மன் கோவில் அருகே செல்வகணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது.

எம்.புதுப்பட்டி போலீசார், செல்வகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News