செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 710 கன அடியாக குறைந்தது

Published On 2021-11-08 15:42 IST   |   Update On 2021-11-08 15:42:00 IST
பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,144 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்ததால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. (மொத்த உயரம் 24 அடி).

இதையடுத்து நேற்று மதியம் முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. முதலில் 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மழை குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து சரிந்தது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

எனினும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,144 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இன்று காலை நிலவரப்படி 2,942 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News